தோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமர் யார் என்று இன்று தெரிந்துவிடும்.
இளையரா, பெண்மணியா அல்லது பழுத்த அரசியல்வாதியா - இம்மூவரில் யார் பிரதமர் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்படுவார் என்பது பிற்பகலில் ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் வாக்கெடுப்பில் முடிவாகும்.
இன்று தேர்ந்து எடுக்கப்படுபவர் அக்டோபர் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தால் புதிய பிரதமர் என அங்கீகரிக்கப்பட்டு அன்றைய தினம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.
உட்கட்சித் தேர்தலில் பிரதமர் பதவிக்கு வரலாறு காணாத அளவில் ஒன்பது பேர் போட்டியிட்டனர். அவர்களில் மூவர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாயினர்.
முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும் அரசியல் வாரிசுமான ஷின்ஜிரோ கொய்சுமி, 43, பொருளியல் பாதுகாப்பு அமைச்சர் சானே தகாய்ச்சி, 63, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா, 67, ஆகியோர் அவர்கள்.
ஆளும் கட்சியின் 368 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள உறுப்பினர்களும் சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு இம்மூவரில் ஒருவரைத் தேர்ந்து எடுப்பர். ஜப்பானிய நேரப்படி பிற்பகல் 3.30 மணிவாக்கில் முடிவு வெளியாகும்.
தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா கடந்த மாதம் தமது பதவி விலகலை அறிவித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தொடர் மோசடிக் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் கட்சியின் செல்வாக்குக் கடுமையாகச் சரிந்ததைத் தொடர்ந்து திரு கிஷிடா பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.

