ஆங் சான் சூச்சிக்கு அரசு ஆலோசகர் பதவி

ஆங் சான் சூச்சிக்கு அரசு ஆலோசகர் பதவி

2 mins read
8b70978a-42b8-488c-9b76-e35e77eb5130
-

யங்கூன்: மியன்மாரின் புதிய அரசாங்கத்தில் திருவாட்டி ஆங் சான் சூச்சிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் ஒரு மசோதாவை ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் துள்ளது. அக்கட்சியின் தலைவியான சூச்சிக்கு புதிய "அரசாங்க ஆலோசகர்" பதவியை வழங்க அந்த மசோதா வகை செய்கிறது. அந்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. திருவாட்டி சூச்சி, கூடுதல் அதிகாரத்துடன் நாட்டை நிர்வகித்து வழிநடத்த இந்தப் புதிய பொறுப்பு வகை செய்யும்.

புதிய அமைச்சரவையில் வெளியுறவு, கல்வி உள்ளிட்ட முக்கிய நான்கு பொறுப்புகளை ஆங் சான் சூச்சி தற்போது வகிக்கிறார். இவற்றுடன் "உச்ச ஆலோசகர்" அல்லது "அரசாங்க ஆலோசகர்" என்ற புதிய பொறுப்பையும் அவர் ஏற்கவுள்ளார். ஆளும் கட்சி தாக்கல் செய்துள்ள மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நாட்களில் அந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார். இரு அவைகளிலும் ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள் ளதால் இந்த மசோதா நிறை வேற்றப்படுவது உறுதி என்று கட்சி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

அரசாங்க ஆலோசகர் பொறுப்பு என்பது கிட்டத்தட்ட பிரதமர் பதவியைப் போன்றது. அரசாங்கத்தை நிர்வகிக்கவும் நாடாளுமன்ற ஜனநாயக முறைகள் மற்றும் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து கூடுதல் அதிகாரத்துவ பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் புதிய பதவி வகை செய்கிறது. அந்த உத்தேச மசோதா நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆங் சான் சூச்சிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. அவசியம் ஏற்பட்டால் நாடாளு மன்றத்தைக் கூட்டுவதற்கும் அந்த மசோதா வழி வகுக்கிறது. ஆங் சான் சூச்சி அதிபராவதை அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் தடை செய்த நிலையில் அவரின் நெருங்கிய நண்பரும் உதவியாள ருமான 69 வயது டின் கியவ் அந்நாட்டு அதிபராக புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.