நஜிப் தவறு செய்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை

நஜிப் தவறு செய்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை

2 mins read
85f85ebe-7f88-409a-b8a9-b8ab8bf94a8f
-

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தவறு செய்ததற்கான ஆதாரமோ அல்லது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரமோ இல்லை என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஹசான் அரிஃபின் கூறியுள்ளார். அதனால்தான் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 106 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் திரு நஜிப்பின் பெயர் இடம் பெறவில்லை என்று திரு ஹசான் கூறினார்.

கிட்டத்தட்ட ஓராண்டு கால மாக எதிர்பார்க்கப்பட்ட அக் குழுவின் அறிக்கை கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மற்றும் முதலீடுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் திரு ஹசான் ஒரு பேட்டியில் கூறியதாக பெர்னாமா தகவல் கூறியது. தேசிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழு ஒருமனதாக எடுத்த முடிவு இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 18 மாதங்களாக திரு நஜிப் மீது கூறப்பட்ட புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் பொதுக் கணக்குக் குழு விசாரணை செய்ததாகவும் திரு ஹசான் கூறினார். 1எம்டிபியின் பிரச்சினை களுக்கு அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஷாரோல் அஸ்ரால் இப்ராகிம் ஹல்மியும் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும்தான் காரணம் என்று அக்குழுவின் அறிக்கை கூறுகிறது. அந்தப் பிரச்சினை களுக்கு நிர்வாகத்தினர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர அரசாங்கம் அல்ல என்று அவர் கூறினார்.

1எம்டிபியின் ஆலோசகராக மட்டுமே திரு நஜிப் செயல் பட்டுள்ளார் என்றும் அந்த நிறுவனத்தினுள் நடந்த தவறான நிதி நிர்வாகத்திற்கு அவரை பொறுப்பேற்கும்படி செய்ய முடியாது என்றும் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.