ஐஎஸ் வசம் இருந்த அரசாங்கக் கட்டடத்தை ஈராக் படை கைப்பற்றியது

ஐஎஸ் வசம் இருந்த அரசாங்கக் கட்டடத்தை ஈராக் படை கைப்பற்றியது

1 mins read

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகளின் வசம் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றான ஃபலுஜாவைக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் போராளிகளுடன் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுப் படைகள் ஃபலுஜா நகரின் மையப்பகுதியில் ஐஎஸ் போராளிகளின் பிடியில் இருந்த உள்ளூர் நகராட்சி அலுவலகக் கட்டடத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தக் கட்டடத்தின்மீது தற்போது ஈராக் நாட்டு தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ் போராளிகள் அங்கு வசிக்கும் மக்களை சித்ரவதைப்படுத்தியும் குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைப்பிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். சிரியாவில் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த சில முக்கிய நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது போல் ஈராக்கிலும் போராளிகளின் வசம் உள்ள நகரங்களை மீட்பதில் ஈராக்கிய ராணுவம் ஈடுபட்டுள்ளது.