இந்தோனீசிய மாலுமி கடத்தல்

இந்தோனீசிய மாலுமி கடத்தல்

1 mins read

ஜகார்த்தா: இஸ்லாமிய தீவிரவாதிகள் அண்மைய மாதங்களில் பலரைக் கடத்திச்சென்ற அபாயகரமான சுலு கடல் பகுதியில் மற்றொரு இந்தோனீசிய மாலுமி கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சென்ற புதன்கிழமை சாபா மாநிலத்துக்கு வடகிழக்கில் இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. சுலு கடற்பகுதியில் சென்ற கப்பலை ஆயுதம் தாங்கிய நால்வர் சென்ற படகு வழிமறித்ததாக மலேசியாவுக்கான இந்தோனீசியத் தூதர் ஹெமன் பிரயிட்னோ கூறினார். அவர்கள் கேட்ட பிணைத் தொகையான 10,000 மலேசிய ரிங்கிட்டுகள் கிடைக்காததால் மாலுமியைக் கடத்திச் சென்றதாகவும் பிரயிட்னோ கூறினார். அவருடன் கடத்திச் செல்லப்பட்ட மேலும் இரண்டு கப்பல் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தச் செயலுக்கு எந்த தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கும் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக இந்தோனீசியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. பிலிப்பீன்சைச் சேர்ந்த அபு சயாஃப் தீவிரவாதக் குழு அண்மையில் வேறு பத்துப் பேரைக் கடத்தியது. இந்த ஆண்டில் பல மலேசிய மாலுமிகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்தோனீசியக் கொடியைத் தாங்கிய கப்பல்கள் பிலிப்பீன்ஸ் பகுதிக்குச் செல்வதற்கு இந்தோனீசியா தடைவிதித்துள்ளது. அத்துடன், அந்தக் கடல் பகுதியில் கூட்டு கடற்துறைப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்தவும் அது வலியுறுத்திவருகிறது.