ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உடைய 68 மலேசியர்களின் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் அகமது ஸாகிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். "மலேசிய குடிமக்களாக இனி அவர்கள் பயண ஆவணங்களைக் கொண்டிருக்க முடியாது. ஒரு வேளை அவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று உள்துறை அமைச்சருமான டாக்டர் அகமது ஸாகிட் கூறினார். அந்த 68 பேருக்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருந்ததை புலனாய்வுத் துறை கண்டுபிடித்த தையடுத்து, பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆணைப்படி அவர்களது கடவுச்சீட்டுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டதாக திரு ஸாகிட் குறிப்பிட்டார்.
கோலா சிலாங்கூரில் நேற்று முன்தினம் நடந்த வட்டார அம்னோ பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசியபோது அவர் இந்த விவரத்தை வெளியிட்டார். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்தவர்களு டன் எவ்வித சமாதானத்திற்கும் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். அத்துடன், நாட்டைவிட்டு வெளியேறி ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காகச் சேவையாற்றச் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் சொன்னார். "நாங்கள் அவர்களைக் கை விட்டுவிட்டோம். அவர்களை மலேசியர்களாக அங்கீகரிக்க நாங்கள் தயாராக இல்லை," என்ற அவர், சித்தாந்த குற்றவாளி களுக்கு நாட்டில் இடமளிக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். ஐஎஸ் அமைப்பில் இணைந்த இரு குடும்பங்களின் கதைகளையும் அவர் விவரித்தார்.

