விட்ரோலிஸ்: பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள மார்சீலில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற் றப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500 தீயணைப்பாளர்களை பிரான்சு தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பற்றிய தீ பலத்த காற்றின் காரணமாக 2,260 ஹெக்டர் பரப்பளவில் இருந்த புல்வெளி, புதர்கள், மரங்கள் போன்றவற்றில் மளமளவெனப் பரவியது. தீ மிகவும் கோரமாகப் பரவிய தாகக் கூறிய தீயணைப்பாளர்கள் முதலில் கட்டுப்படுத்த இயலாது என்று கூறினாலும் இரவு நேரத்தில் சாதகமான சூழல் நிலவியதால் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைப்புப் பொருட்களைத் தூவி தீயின் தீவிரத்தை வீரர்கள் தணித்தனர். காட்டுத் தீயால் ஒருவர் மோசமாகக் காயமுற்றார். மழைப்பொழிவு குறைந்து தென்கிழக்கு பிரான்சில் வறண்ட காலநிலை நிலவுவதால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முற்றிலுமாக அணைக் கப்படவில்லை என மார்சீலின் மேயர் டுவிட்டரில் குறிப்பிட்டார். இதற்கிடையே, ஹெரால்ட் பகுதியில் நேர்ந்த மற்றொரு தீச்சம்பவத்தில் தீயணைப்பு வாக னத்தை தீ சுற்றி வளைத்ததால் அதில் இருந்த நான்கு தீயணைப்பாளர்கள் காயமுற்றதாகக் கூறப் பட்டது. தீச்சம்பவம் காரணமாக மார்சீல் பகுதியில் சாலை, வான்வழிப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மார்சீல் விமான நிலையத்தில் இரண்டு விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
தெற்கு பிரான்சில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படம்: ஏஎஃப்பி

