கோலாலம்பூர்: மலேசியாவின் பயங்கரவாதச் சந்தேக நபர் களிடம் கையெறி குண்டுகள் இருப்பதாகவும் நாடு முழுவதும் இன்னும் பல தாக்குதல்களுக்குத் திட்டமிட இவை பயன்படக்கூடும் என்றும் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் திரு அயொப் கான் கூறினார். கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள மொவிடா இரவு விடுதியில் ஜூன் மாதம் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மிரட்டலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்முறையாக சிரியாவிலிருந்த மலேசிய ஐஎஸ் உறுப்பினர்கள் சிரியாவில் இருந்தபடியே மலேசியாவில் இருக்கும் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தி, வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தினர்.
இதனால் நாடெங்கிலும் பீதி ஏற்பட்டதாகத் திரு அயொப் கூறினார். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கோலாலம்பூரில் போலிசாரும் ராணுவ வீரர்களும் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூச்சோங்கில் உள்ள இரவு கேளிக்கை விடுதியைக் குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவின் பல இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. படம்: தி ஸ்டார்

