ரோம்: இத்தாலியின் மையப் பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்த தாகவும் சுமார் 150 பேரைக் காணவில்லை என்றும் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ள தாகவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை 3.36 மணி யளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட தாகவும் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெருஜியா நகரிலிருந்து 76 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அதிகாலை நேரமாக இருந்த தால் அப்போது பலர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நகரத்தின் பாதிப் பகுதி முற்றாக அழிந்துவிட்டதாக அந் நகர மேயர் தெரிவித்துள்ளார். ரோம் நகரில் சில கட்டடங்கள் 20 நிமிடங்கள் வரை ஆட்டம் கண்டதாக ஒரு பத்திரிகைத் தகவல் தெரிவித்தது.
மற்றொரு நகரான அக்குமோலி யில் பல கட்டடங்கள் மோசமாக சேதம் அடைந்ததாகவும் இடிபாடு களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் உயிரோடு இருப் பதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியவில்லை என்றும் அந்நகர மேயர் கூறியுள்ளார். இதற்கிடையே பெஸ்காரா நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறின. நேற்று உலுக்கிய நிலநடுக் கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் அமட்ரிஸ். இந்நகரம் மலைகள் சூழ்ந்துள்ள பகுதி. நிலநடுக்கத்தின்போது இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் மண்சரிவால் மூடப் பட்டுள்ளதாகவும் மண்சரிவை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் இந்நகரில் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இங் குள்ள மருத்துவமனை ஒன்றும் மோசமாக சேதம் அடைந்தது. வீடுகளில் மின் இணைப்பு துண் டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இருளில் தவிக்க நேர்ந்தது. நிலநடுக்கத்தில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டதால் பழுது அடைந்தன. பாலங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமானதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக் கப்பட்டது. வீடுகளிலிருந்து வெளி யில் ஓடிவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்க நேர்ந்தது.
"இந்நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். சாலைகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்ததால் மீட்புக் குழுவினர் உடனடியாக வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை," என்று குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல இடங்களில் நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதற்கு முன்பு இத்தாலியில் கடந்த 2009-ஆம் ஆண்டில் அகுய்லா பகுதியில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற் பட்டது. அப்போது 300 பேர் உயிரிழந்தனர்.
இத்தாலியில் அமட்ரிஸ் நகரில் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள ஒருவர் உயிருடன் மீட்கப்படுகிறார். இத்தாலியின் பல பகுதிகளை நேற்று உலுக்கிய 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்

