சோல்: சென்ற வாரம் வடகொரியா அதன் ஐந்தாவது அணுவாயுத சோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் வேளையில் குண்டு வீசித் தாக்கும் அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் தென்கொரி யாவுக்கு உயரே பறந்தன. அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு அதன் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தென்கொரியாவில் உள்ள ஓசன் ஏர்பேஸ் விமானத் தளத்திற்கு உயரே அதிக அளவு ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடிய ஆற்றல் கொண்ட அவ்விரு போர் விமானங்களும் மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் விமானங்கள் அதனைப் பின் தொடர்ந்து சென்றதாகவும் தென் கொரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தென்கொரியாவில் உள்ள 28,500 அமெரிக்க வீரர்களின் தளபதி ஜெனரல் வின்சென்ட் புரூக்ஸ் அமெரிக்க போர் விமானங்கள் உயரே பறந்ததை கூர்ந்து கவனித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தென்கொரிய விமானத் தளத்திற்கு உயரே தாழ்வாகப் பறக்கும் அமெரிக்க போர் விமானங்கள். படம்: ராய்ட்டர்ஸ்

