லாஸ் ஏஞ்சலிஸ்: வாஷிங்டனில் உள்ள 'கேஸ்கேட்' கடைத் தொகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் பலி யாகினர். மேலும், ஒரு ஆடவர் காயமுற்றார். துப்பாக்கிக்காரனை போலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரு நபர் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக போலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். கடைத்தொகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றுக்குள் துப்பாக்கி ஏந்திய இளம் ஆடவர் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அந்த நபர் தேடப்படுகிறார்.
'கேஸ்கேட்' கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு நிகழ்வதாக சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 6.58 போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலிசார் அவ்விடத்துக்குச் செல்வதற்கு முன்பாக அந்த நபர் விரைவுச் சாலை ஒன்றின் வழியாக வெளியேறியதும் காணொளியில் பதிவாகி உள்ளது. கடைத்தொகுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக அரு கில் இருந்த தேவாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைத்தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர். பல அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வசிக்கும் குடிமக்கள் வெளியே வரவேண்டாம் என போலிசார் எச்சரித்துள்ளனர்.

