மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்ட தாய்

மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்ட தாய்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு தாய் அவரது எட்டு வயது மகளை சங்கிலியால் கட்டிப் போட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து மலேசியர்கள் பலர் தங்கள் சினத்தை வெளிப் படுத்தியுள்ளனர். ஒரு தாய் தன் மகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதை பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். தன் மகள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்த தால் அதற்குத் தண்டனையாக மகளை இரும்புச் சங்கிலி கொண்டு ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டிப்போட்டதாக 30 வயதான மாது கூறியுள்ளார்.

பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஒரு சிறுமி விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள செய்தி கிடைத்ததும் போலிசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்ததாக சுபாங் ஜெயா போலிஸ் அதிகாரி முகம்மது அஸ்லின் சடாரி கூறினார். அந்த மாது தன் மகளைச் சங்கிலியால் கட்டிப் போட்டதை ஒப்புக்கொண்டதாக அஸ்லின் கூறினார். சிறுமியை விடுவித்த போலிசார் சிறுமியையும் அவரின் தாயாரை யும் விசாரணைக்காக அழைத் துச் சென்றனர்.