கோலாலம்பூர்: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, கையூட்டுப் பெற்றது தொடர்பில் மலேசிய மூத்த அதிகாரி ஒருவரும் அவரது இரு மகன்களும் விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். மலேசிய கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளரான 59 வயது முகம்மது அரிஃப் ரஹ்மானும் அவரின் 34, 29 வயது மகன்களும் தனித்தனி கார்களில் நேற்று காலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அவர்களை செக் ஷன் 117 இன் கீழ் 14 நாள் தடுத்து வைக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அஹ்மட் அக்ராம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி நிக் இஸ்ஃபானி தஸ்னிம் ஏழு நாட்களுக்கு மட்டுமே அந்த மூவரையும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதிகார மீறல், ஊழல் விவகாரம் தொடர்பில் முகம்மது அரிஃப் புதன்கிழமை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். வேலைக்கு புறப்பட்டுச் செல்ல விருந்த சமயத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மது அரிஃப் (ஆரஞ்சு நிற சட்டை உடுத்தியிருப்பவர்) நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். படம்: தி ஸ்டார்