டாவோஸ்: எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பது, தயாரிப்பது ஆகியவற்றுக்காக உலகின் சில நாடுகள், சுகாதார நிபுணர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரின் நிதியுதவியுடன் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாக அந்நோயால் 11,300க்கும் அதிகமானோர் பலியானதை அடுத்து, மீண்டும் அத்தகைய நோய்ப்பரவல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
"எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அனைத்துலக காப்புறுதித் திட்டம் இது," என 'சிஇபிஐ' எனப்படும் இந்த 'நோய்ப்பரவல் தயார்நிலை புத்தாக்கங்கள் கூட்டணி'யின் இடைக்காலத் தலைமை நிர்வாகி ஜான் ஆர்னே கூறியுள்ளார். டாவோஸில் நடைபெறும் அனைத்துலகப் பொருளியல் கலந்துரையாடலில் சிஇபிஐ அமைப்பின் நிறுவனர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். ஜெர்மனி, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளும் 'தி பில் & மெலிண்டா கேட்ஸ்' அற நிறுவனம், 'வெல்கம் டிரஸ்ட்' அனைத்துலக சுகாதார அற நிறுவனம் ஆகியனவும் இத்திட்டத்திற்குத் தொடக்க நிதியாக $657 அளித்துள்ளன.