ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆடவர் ஒருவர் தாம் ஓட்டிச் சென்ற காரை வேண்டுமென்றே நடைபாதையில் செலுத்தி யதால் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். குறைந்தது 31 பேர் காயமுற்றனர். மரணமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று ஆஸ்திரேலிய போலிசார் தெரி வித்துள்ளனர். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று பிற்பகல் மெல்பர்னின் மையப் பகுதியில் உள்ள பர்க் ஸ்திரீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது மதிய உணவு நேரமாக இருந்ததால் அங்குள்ள நடைபாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஃபிளிண்டர்ஸ் ஸ்திரீட் ரயில் நிலை யத்துக்கு வெளியே உள்ள சாலை சந்திப்பில் கருஞ்சிவப்பு நிறக் காரில் ஆடவர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் வட்டமிட்டுக் கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் நிகழாதிருக்க கார் ஓட்டுநரைத் தடுக்கும் நோக்குடன் இருவர் அவரை அணுகினர். ஆனால் அவர்களைப் பொருட்படுத்தாமல் அந்த ஆடவர் வேகமாகக் காரை நடைபாதைக்குள் செலுத்தியதாகச் சம்பவத் தை நேரில் பார்த்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் செல்லா திருக்க அவர் ஓட்டிக்கொண்டிருந்த கார் மீது போலிஸ் கார் ஒன்று மோதியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் விவரித்தார். அதையடுத்து, அந்த ஆடவரின் காரை ஏறத்தாழ பத்து போலிஸ் அதிகாரிகள் சூழ்ந்துகொண்டு அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும் சிறிது நேரம் கழித்து, அந்த ஆடவரை காரிலிருந்து வெளியே இழுத்து மடக்கிப் பிடித்ததாகவும் அவர் கூறினார்.