ஹாங்காங்: ஹாங்காங்கின் முன்னாள் தலைமை நிர்வாகி டோனல்ட் சாங்கின் தவறான நடத்தை காரணமாக அவருக்கு 20 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக திரு சாங்கின் மனைவி செலினா கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரச்சினைகளுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் சொன்னார். தாம் பதவியில் இருந்தபோது உரிமம் வழங்கிய ஒலிபரப்பு நிறுவனம் ஒன்றின் முதலீட்டாளரிடமிருந்து ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பைக் குத்தகைக்குப் பெறத் திட்டமிட்டிருந்ததை திரு டோனல்ட் சாங், 72, தெரிவிக்கவில்லை எனும் குற்றம் சென்ற வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு தலைமை நிர்வாகியாக தலைமைப்பொறுப்பு ஏற்றிருந்த திரு சாங், குற்றவியல் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும் ஆக மூத்த அதிகாரி ஆவார்.
முன்னாள் தலைமை நிர்வாகிக்கு 20 மாதச் சிறைத் தண்டனை
1 mins read

