டாக்கா: மியன்மாரில் நீடிக்கும் ரோஹிங்யா பிரச்சினைக்கு தவறான தகவல் பரவலே காரணம் என்று அந்நாட்டு அரசாங்க ஆலோசகரும் ஆளும் கட்சித் தலைவருமான ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி தவறான தகவல்கள் பரவியதற்கு பயங்கர வாதிகளே காரணம் என்று திருவாட்டி சூச்சி குற்றம் சாட்டி னார். ரோஹிங்யா விவகாரத்தில் சூச்சி அம்மையார் மெளனமாக இருப்பது குறித்து மேற்கத்திய நாடுகள் குறை கூறிய வேளையில் இந்த விஷயத்தில் திருவாட்டி சூச்சி தலையிட்டு ரோஹிங்யா மக்களின் இன்னல்களைப் போக்க தீர்வு காண வேண்டும் என்று இந்தோனீசியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ் ஆகிய முஸ்லிம் நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. ராக்கைன் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வன்முறை வெடித்ததற்குப் பிறகு முதன் முறையாக அதுபற்றி பேசிய திருவாட்டி சூச்சி, பொய்யான தகவல் பரவியதால்தான் பல்வேறு சமூகத்தினருக்கு இடையே பல பிரச்சினைகள் உருவானதாக குறிப்பிட்டார்.
மியன்மாரிலிருந்து வெளியேறிய ரோஹிங்யா அகதிகள் பங்ளாதேஷ் எல்லையை சென்றடைய சகதி நிறைந்த பாதை வழியாக நடந்து செல்கின்றனர். அவர்களில் சிலர் படகு மூலம் வந்து சேர்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

