கோலாலம்பூர்: 'ஹலோவீன் பார்ட்டி' என்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு மனித வெடிகுண்டு போல் ஆடை அணிந்து வந்து பலரை பயமுறுத்திய ஏமென் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 400 ரிங்கிட் அபராதம் விதித்தது. அம்ஜட் ஜலால் அகமது அல் என்ற அந்த 34 வயது ஆடவர், கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, அர்மானி தெரர்ஸ் என்ற பொது இடத்தில் மனித வெடிகுண்டு போல் ஆடை அணிந்து வந்ததை ஒப்புக்கொண்டார்.
குற்றவியல் சட்டம் 290- வது பிரிவின் கீழ், அக்குற்றத்திற்கான அதிகபட்சத் தண்டனையாக 400 ரிங்கிட் அபராதத் தொகை விதிக்கப்படுவதாக மாவட்ட நீதிபதி நூருல் ஹூடா ஸகாரியா கூறினார். விருந்தில் கலந்துகொண்டவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற அந்த விருந்து நிகழ்ச்சியின் கருப்பொருளுக்கு ஏற்ப அவர் அந்த ஆடையை அணிந்துவந்ததாகவும் மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

