ஹராரே: ஸிம்பாப்வேயை ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யப்போவதாக அந்நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் எமர்சன் மனங்காக்வா உறுதி அளித்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக ஸிம்பாப்வேயின் அதிபராக இரும்புக் கரம் கொண்டு ஆட்சி நடத்திய 93 வயது ராபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகினார். திரு முகாபேயை அடுத்து, அதிபர் பதவி வகிப்பது குறித்து திரு மனங்காக்வாவுக்கும் திரு முகாபேயின் மனைவிக்கும் இடையே பூசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்மாதம் 6ஆம் தேதியன்று துணை அதிபராக இருந்த திரு மனங்காக்வா பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஸிம்பாப்வே ராணுவம் திரு முகாபேயின் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டை அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. வேறு வழியின்றி திரு முகாபே பதவி விலகினார்.
அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் எமர்சன் மனங்காக்வா. படம்: ஏஎஃப்பி

