மலாக்கா: மலேசியாவில் மேலும் நகைக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. மலாக்கா மாநிலத்தில் நகைக் கடை ஒன்றில் 200,000 ரிங்கிட் கொள்ளை போயுள்ளது. கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நகைக் கொள்ளை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஆக அண்மைய சம்பவமாக நேற்று முன்தினம் மலாக்கா நகைக் கடை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பண்டார் ஜேசின் 2ல் உள்ள அந்த நகைக் கடையை அதன் உரிமையாளர் காலையில் திறந்த போது அதிர்ச்சியடைந்தார். கடை யின் வாயிற்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த 63 வயது உரிமையாளர் உடனடியாக போலிசை வரவழைத் தார்.
முந்தின நாள் இரவில் கடைக்குப் பின்னாலுள்ள இரும்புக் கதவின் மீது ஏறிக்குதித்து கடை வளாகத்திற்குள் கொள்ளையர்கள் நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருப்பதாக ஜேசின் மாவட்ட தலைமை போலிஸ் அதிகாரி அர்ஷத் அபு தெரிவித்தார். கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்த கூரையை அகற்றி கடைக்குள் இறங்கியதற்கான தடயம் இருப் பதாக அவர் சொன்னார். இச்சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் திரு அர்ஷத் தமது அறிக்கையில் கூறினார்.

