சோல்: தென்கொரியாவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததான குற்றச்சாட்டின் பேரில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சாம்சுங் நிறுவன துணைத் தலைவர் ஜே ஒய் லீ விடுதலை செய்யப்பட்டார். மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று அவரை விடுதலை செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சாம்சுங் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.
தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹையின் நெருங்கிய தோழி சோய் சூன் சில், அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்குத் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெரும்தொகையை நன்கொடையாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சென்ற ஆண்டு 49 வயதான ஜே ஓய் லீ கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

