ஜகார்த்தா: இந்தோனீசியாவின் யோக்யகார்த்தாவில் உள்ள ஒரு தேவாலயத்தினுள் புகுந்த நபர் தான் வைத்திருந்த நீண்ட கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும் அத்தாக்குதலில் நால்வர் காயம் அடைந்ததாகவும் இந்தோனீசியப் போலிசார் கூறினர். அந்த நபர் போலிசாரிடம் பிடிபட்டுள்ளார். ஸ்லிமேன் வட்டாரத்தில உள்ள லிட்வினா தேவாலயத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் நடந்த அத்தாக்குதலில் அந்த தேவாலயக் குழு உறுப்பினர்கள் மூவர் மற்றும் ஒரு போலிஸ் அதிகாரி காயம் அடைந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்த நபர் தேவாலயத்தின் முக்கிய நுழை வாயில் வழியாக உள்ளே நுழைந்து தேவாலய உறுப்பினர் ஒருவரைக் கத்தியால் தாக்கி காயப்படுத்திய பின் உள்ளே சென்றதாக அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
நீளமான கத்தி வைத்திருந்த ஒரு சந்தேக நபர் லிட்வினா தேவாலயத்திற்குள் நுழைந்து நால்வரைத் தாக்கி காயப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த தேவாலயத்திற்கு வெளியே போலிசார் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

