ஹாங்காங்: மின்தூக்கி வேகமாக மேல் நோக்கிச் சென்று 46 மாடி கட்ட டத்தின் உச்சியில் மோதியதில் கணவன், மனைவி காயமுற்றனர். அவ்விருவருக்கும் 32 வயது. இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று முன்தினம் மாலை ஹாங்காங்கின் விங் ஷுன் என்னும் பகுதியில் நிகழ்ந்தது. மாலை 4 மணியளவில் தம்ப தியர் இருவரும் வாட்டர்சைட் பிளாசாவின் 15வது மாடியில் உள்ள தங்களது வீட்டுக்குச் செல்ல மின்தூக்கியில் ஏறினர். அவர்களுடன் மற்றொருவரும் ஏறியதை கண்காணிப்புக் கருவி யின் படங்கள் காட்டின.
ஆனால், அந்த மூன்றாமவர் 15 மாடிக்கு முன்னதாகவே இறங்கிவிட்டார். அதன் பின்னர் கதவுகளை மூடிய மின்தூக்கி கட்டுப்பாட்டை இழந்து படுவேக மாக மேல்நோக்கிச் சென்றது. கட்டடத்தின் உச்சிக்குச் சென்று மோதியதன் விளைவாக மின்தூக்கி கடுமையாகச் சேத மடைந்து அதன் கூரை உள்நோக்கி இறங்கியதாக 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' தெரிவித்தது. மின்தூக்கியின் கம்பிகளைப் பிடித்திருந்தபோதிலும் மோதிய வேகத்தில் தம்பதியர் இருவரும் மின்தூக்கியின் பக்கவாட்டுக்குப் பலமாகத் தூக்கி எறியப்பட்டதாக நம்பப்படுகிறது.
மின்தூக்கிக் கூரையிலிருந்து கண்ணாடிச் சிதறல்கள் உள்ளிட்ட உடைந்த பாகங்கள் அவர்களின் மீது விழுந்ததாகவும் கூறப்படுகி றது. அதன் காரணமாக கணவரின் தலையிலும் மனைவியின் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டன. மின் தூக்கியிலிருந்து தீயணைப்பாளர் கள் மீட்டபோது அவ்விருவரும் நிதானத்துடன் இருந்தனர். இருப் பினும் பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததாக போஸ்ட் குறிப்பிட்டது.
இது ஓர் அரிதான சம்பவம் என்று மின்சார, இயந்திரச் சேவைத் துறை தெரிவித்தது. திடீரென்று மின்தூக்கி கட்டுப்பாட்டை இழந்தது எதனால் என்ற விசாரணை தொடருகிறது. ஹாங்காங்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் இரண்டாவது மின்தூக்கிச் சம்பவம் இது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பழுது பார்ப்பில் இருந்த மின்தூக்கி ஒன்று திடீரென்று வேகமாகக் கிளம்பி கட்டட உச்சியில் மோதியது. ஆனால், அச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

