மலேசியாவின் 14வது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இம்மாதம் 28ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 11 நாட்களுக்கு கட்சிகள் பிரசாரத்தை மேற்கொள் ளலாம் என மலேசிய ஆணையத்தின் தலைவர் முகமது ஹஷிம் அப்துல்லா நேற்று தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்த பட்சம் 11 நாட்கள் அளிக்கப்படவேண்டும்.
இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு வாரநாள் ஒன்றில் தேர்தல் நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாரநாளான புதன்கிழமையில் தேர்தல் நடைபெற உள்ளது. வாரநாளில் தேர்தல் நடைபெற இருப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் தேர்தல் நாளில் பணிக்குச் செல்வர். அதனால் வாக்களிப்பது சிரமம் என்பதைக் குறிப்பிட்டு, "இது நஜிப், அம்னோவின் தேர்தலில் வெற்றிபெறும் மற்றொரு தந்திரம்," என எதிர்க்கட்சியைச் சேர்ந்த வான் சைஃபுல் வான் ஜான் கூறியுள்ளார். சிங்கப்பூரில் தற்போது பணிபுரியும் 400,000 மலேசியர்களில் சிலர் இங்கேயே தங்கி இருந்தாலும் பெரும்பாலானோர் தினமும் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.

