குவைத்தில் பணிக்குச் செல்ல பிலிப்பீன்ஸ் அதிபர் நிரந்தரத் தடை

குவைத்தில் பணிக்குச் செல்ல பிலிப்பீன்ஸ் அதிபர் நிரந்தரத் தடை

1 mins read

மணிலா: குவைத்தில் பிலிப்பீன்ஸ் நாட்டு மக்கள் வேலை செய்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விதிக்கப்பட்டுள்ள தடை நிரந்தரமாவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிக்கோ டுட்டர்டே நேற்று தெரிவித்தார். குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்கள் சரிவர நடத்தப்படாததற்கான எதிர்ப்பை வலுவாகத் தெரிவிக்கும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குவைத்தில் பிலிப்பீன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டு அவரது உடல் குளிரூட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து சென்ற பிப்ரவரியில் அதிபர் டுட்டர்டே தற்காலிகத் தடையை அறிமுகப்படுத்தி இருந்தார்.

கொடுமைப்படுத்தும் முதலாளிகளிடமிருந்து பிலிப்பீன்சைச் சேர்ந்த பணிப்பெண்கள் மீட்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளிகள் வெளியானதை அடுத்து குவைத்திலிருந்து பிலிப்பீன்ஸ் தூதர் வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன் பிலிப்பீன்சிலிருந்து குவைத் தூதரும் மீட்டுக்கொள்ளப்பட்டார். பிலிப்பீன்ஸ் வெளியுறவுத் துறை அறிக்கையின்படி சுமார் 262,000 பிலிப்பீன்ஸ் மக்கள் குவைத்தில் பணிபுரிகின்றனர். அவர்களில் சுமார் 60% வீட்டுவேலைகள் செய்துவருகின்றனர். குவைத்தில் பணிபுரியும் பிலிப்பீன்ஸ் நாட்டவரை சொந்த நாட்டுக்குத் திரும்பி வேறு வேலைகளில் சேரும்படி அதிபர் டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார்.