கோலாலம்பூர்: சிறையிலிருந்து விடு விக்கப்பட்ட கெஅடிலான் கட்சி ஆலோசகர் அன்வார் இப்ராகிம் உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்று கூறியுள்ளார். "பக்கத்தான் ஹரப்பானின் புதிய அரசாங்கத்தில் நான் இப்போது சேவையாற்ற மாட்டேன். குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் வெளிநாடுகளில் சொற்பொழிவு ஆற்றுவதற்கும் எனக்கு நேரம் தேவைப்படுகிறது," என்று திரு அன்வார் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார். "தற்போது அமைச்சரவையில் நான் சேவையாற்ற வேண்டிய அவசியமில்லை," என்று திரு அன்வார் கூறினார். பிரதமர் டாக்டர் மகாதீரும் துணைப் பிரதமர் வான் அசிஸாவும் நிர்வாகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.
"திரு மகாதீரும் அசிஸாவும் நாட்டை நிர்வகிக்க அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்," என்று கூறிய அன்வார் தனக்கு பல வகையில் உறுதுணையாக இருந்த டாக்டர் மகாதீருக்கு தனது நன்றியைத் தெரி வித்துக்கொண்டார். அன்வார் நேற்று காலை 11.30 மணியளவில் விடுதலையானதும் செராஸ் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த அவரை ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விடுதலையானதும் பேரரசரை சந்திக்க அரண்மனைக்கு வந்த அன்வாரை முதலில் வரவேற்றவர் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர்தான். திரு மகாதீருடன் கைகுலுக்கிய அன்வார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். படம்: பெர்னாமா

