தோக்கியோ: 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பை கைது செய்யுமாறு மலேசிய மக்கள் பலர் அரசாங்கத்தை நெருக்கி வருவதாகக் கூறிய மலேசியப் பிரதமர் மகாதீர், அது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார். "நாங்கள் எப்போது நஜிப்பை கைது செய்யப்போகிறோம் என் பதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல. நீதிமன்றம் ஏற்றுகொள்ளக்கூடிய ஆதாரங்களை நாங்கள் சேகரிக்க வேண்டியிருக்கிறது," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
"ஆதாரங்கள் வலுவானதாக இல்லாமல் இருந்து நஜிப் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அவர் மீது நாங்கள் வீண் பழி சுமத்தியதாகி விடும்," என்று திரு மகாதீர் குறிப்பிட்டார். ஜப்பான் சென்றுள்ள திரு மகாதீர் ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள மலேசியர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.
தோக்கியோவில் நடந்த 'ஆசியாவின் எதிர்காலம்' குறித்த மாநாட்டில் திரு மகாதீரை வரவேற்கும் பேராளர்கள். படம்: ஏஎஃப்பி

