தோக்கியோ: ஜப்பானில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்த அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே, பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க உதவும் வகையில் 18 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க விருப்பதாக அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ஜப்பானில் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 204 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலரைக் காணவில்லை. மீட்புப் பணிகளில் 73,000 பேர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

