இஸ்தான்புல்: துருக்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடப்பில் இருந்துவந்த அவசரநிலை அறிவிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அங்கு ஏற்பட்ட ராணுவப் புரட்சியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய துருக்கிய அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் அவசரநிலை நடப்பில் இருப்பதாக அப்போது அறிவித்தார்.
வழக்கமாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே நடப்பில் இருக்கும் அவசரநிலைப் பிரகடனம் ஏழு தடவை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படுவதைத் தடுக்க அதிபர் எர்டோகன் கடும் நடவடிக்கைகளை எடுத்தார். ராணுவ அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

