யங்கூன்: மியன்மாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 54,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் தங்குவதற்கு 163 தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார். மியன்மாரில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்பதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

