இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மம்னூன் ஹுசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இஸ்லாமாபாத்திலுள்ள அதிபர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் நசிர் உல் முல்க், ராணுவத் தளபதி பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான்கான். தனது 22 ஆண்டு கால அரசியல் போராட்டத்திற்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்திருப்பதாக திரு இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ஆம் தேதி நடந்த தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது. இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக் கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரான 65 வயது இம்ரான் கான் 176 வாக்குகளைப் பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்திலுள்ள அதிபர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஏஎஃப்பி

