பெட்டாலிங் ஜெயா: 1எம்டிபி விவகாரம் தொடர்பாக ஜோ லோ எனப்படும் லோ தேக் ஜோவை மலேசியா வலைவிரித்து தேடி வருகிறது. மலேசிய அரசாங்கத்தில் இருக்கும் சிலர் அவரைக் காப்பாற்றும் நோக்கில் மலேசிய போலிசாரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவருக்குத் தகவல் கொடுப்பதாக மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத்தான் ஜோ லோ பிடிபடாமல் இருப்பதாக அவர் சேனல் நியூஸ் ஏஷியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஜோ லோ தமது குடும்பத்தாருடன் ஹோட்டல் ஒன்றில் இருந்ததாக நோன்புப் பெருநாளுக்கு முன்பு தமக்குத் தகவல் கிடைத்ததாக திரு டயிம் தெரிவித்தார்.
ஆனால் தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஜோ லோ அங்கிருந்து மாயமானதாக அவர் கூறினார். மலேசிய அரசாங்கம் தமக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்தால் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ஜோ லோ தம்மிடம் கூறியதாக திரு டயிம் சொன்னார். ஆனால் மலேசியாவுக்கு வந்து பேசும்படி ஜோ லோவிடம் தாம் கூறியதாக திரு டயிம் தெரிவித்தார்.

