மெல்பர்ன்: எப்படியோ கடலுக்குள் தாவிச் சென்ற கங்காருவை ஆஸ்திரேலிய போலிசார் கரைசேர்த்து, இதய இயக்க மீட்பு சிகிச்சை மூலம் காப்பாற்றினர். மெல்பர்ன் நகரில் உள்ள 'சேஃப்டி கடற்கரை'யை ஒட்டிய கடற்பகுதியில் கங்காரு ஒன்று நீரைவிட்டு வெளியேற முடியாமல் உயிருக்குப் போராடுவதாக கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலிஸ் அதிகாரிகள் செல்வதற்கு முன்னரே அந்தக் கங்காரு கரையை அடைந்துவிட்டதாகவும் கடற்கரையில் இருந்த ஒருவர் ஒரு துவாலையைக் கொண்டு அதன் உடலை மூடியிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், போலிஸ் அதிகாரிகள் நெருங்கியதும் அது மீண்டும் கடலுக்குள் பாய்ந்தது. "கங்காரு நீந்தத் தொடங்கியபோதும் அலைகளால் அது மீண்டும் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது," என்று விக்டோரியா போலிஸ் அறிக்கை மூலம் கூறியது. அதையடுத்து, இரண்டு அதிகாரிகள் கடலுக்குள் இறங்கி அதை மீட்டுக் கரைசேர்த்தனர். இம்முறை அது சுயநினைவை இழந்திருந்ததால் 'சிபிஆர்' எனப்படும் இதய இயக்க மீட்புச் சிகிச்சை மூலம் அது காப்பாற்றப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

