கோலாலம்பூர்: ஒரே வாரத்தில் முட்டை விலை 30 விழுக்காடு உயர்ந்தது கூட்டுச் சதியின் காரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று மலேசிய அரசாங்கம் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு கூடை டிசம்பர் மாதத் தொடக்கத்தில் 5.11 ரிங்கிட் விலையில் விற்கப்பட்டன. இது முந்தைய வாரத்தில் விற்பனையான 3.98 ரிங்கிட்டை காட்டிலும் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகம். தற்போது பத்து முட்டைகள் நான்கு ரிங்கிட் என்ற விலைக்கு மலேசியாவில் சராசரியாக விற்கப்படுகின்றன.
இதனால் விநியோகக் கட்டமைப்பில் ஏதேனும் கூட்டுச் சதி அல்லது விலையை வேண்டுமென்றே உயர்த்தக் கூட்டமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து உள்துறை வர்த்தக, பயனீட்டாளர் விவகாரங்கள் அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. முட்டை விலை அதிகமாகவே இருந்தால் அல்லது தொடர்ந்து உயர்ந்தால், மலேசியாவின் பயனீட்டாளர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் கூறப்பட்டது. சிங்கப்பூர், ஹாங்காங், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கும் முட்டைகளை ஏற்றுமதி செய்து வருவதால் இத்தகைய விலை உயர்வினால் ஏற்றுமதி பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

