வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசாங்கத்தின் செலவின மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபையில் ஒப்புதல் கிடைக்காததால் அரசாங்க நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவின மசோதாவுக்கும் அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்த செனட் சபை எந்தவிதமான நிதி மசோதாவை யும் நிறைவேற்றாமல் அதுகுறித்த பேச்சை ஒத்திவைத்துள்ளது. மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திரு டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் திரு டிரம்ப்பின் இந்தக் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. அது குறித்து வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த கடைசி நேரப் பேச்சு தள்ளிவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்புத் துறை, போக்குவரத்து துறை, வேளாண் துறை, வெளியுறவு அமைச்சு, நீதித்துறை அமைச்சு ஆகிய வற்றின் பணிகள் நேற்று முதல் முடங்கியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இன்னும் பலருக்கு பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் வேளையில் நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

