மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் செயல்படும் வெளிநாட்டுத் தூதரங்களுக்கு வந்துள்ள சந்தேகத்திற்குரிய பொட்டலங்கள் குறித்து ஆஸ்திரேலிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேன்பரா, மெல்பர்ன் நகரம் முழுவதும் உள்ள தூதரகங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்று மெல்பர்ன் நகர தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா உள்பட பல தூதகரங்கள் இதில் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். "மர்மப் பொட்டலங்களை அவசரகாலச் சேவை ஊழியர்கள் சோதித்து வருகின்றனர். சூழ்நிலை குறித்தும் ஆராயப்படுகிறது," என்று ஆஸ்திரேலிய மத்திய போலிசார் தெரிவித்தனர்.
"இந்தச் சம்பவங்கள் பொதுமக்களை இலக்காக வைத்து நடத்தப்படவில்லை என்று நம்பப்படுவதாகவும் மெல்பர்ன் மாநில போலிசார் குறிப்பிட்டனர். இதற்கிடையே இந்தியா, தென்கொரியா, நியூசிலாந்து, கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட தூதரகங்களில் அவசரகால ஊழியர்கள் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஒருவர் "எங்களுடைய அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்றார்.

