பாரிஸ்: பிரான்சில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் நேற்று ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை அவர்கள் மீது வீசியதாகவும் தகவல்கள் கூறின. பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனின் பொருளியல் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒன்பது வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிஸ் நகரின் கடைத்தொகுதி வழியாக ஊர்வலமாகச் சென்றபோது அப்பகுதியில் உள்ள ரொட்டி, கேக் விற்பனைக் கடையில் எரிவாயு வெடித்ததில் 2 தீயணைப்பாளர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். அந்த வெடிப்பில் பலர் காயம் அடைந்தனர்.

