நோம்பென்: கம்போடியாவுக்கு வழங்கப்பட்டுள்ள வரிகளற்ற வர்த்தகச் சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் ரத்து செய்தால் கம்போடியாவின் எதிர்க்கட்சி யினரின் கதை முடிக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஹுன் சென் (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்போடியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நிகழ்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கம்போடியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பு அந்நாட்டில் உள்ள எதிர்க் கட்சியினரை முடக்கிவிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்தத் தேர்தலில் ஹுன் சென் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
அதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் அதிகார பூர்வமாக நடவடிக்கை எடுக்க தொடங்கியது. "எதிர்க்கட்சியினரின் கதையை நாங்கள் முடித்துவிட வேண்டும் என்றால் சலுகையை ரத்து செய்யுங்கள். கம்போடியாவின் எதிர்க்கட்சியினர் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் வரிகளற்ற வர்த்தகச் சலுகையை ரத்து செய்யாமல் பேச்சு வார்த் தைக்கு வாருங்கள்," என்று ஹுன் சென் எச்சரித்துள்ளார்.