கோலாலம்பூர்: சிறுமிகள் தங்களது மானத்தைக் காப்பாற்றத் தவறினால் அவர்கள் ஒதுக்கப்பட்டு தங்களது குடும்பத்தின் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்துவர் என்று கூறும் பாடநூல் ஒன்று உடனே திருத்தப்பட வேண்டும் என்று மலேசிய கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி முன்றாம் வகுப்புப் பாடநூல் ஒன்றில் இடம்பெற்றுள்ள இந்த வாசகங்கள் குறித்து சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டதாக அந்நாட்டின் துணை கல்வி அமைச்சர் டியோ நி சிங் தெரிவித்தார். "சிறார்களின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தீர்மானத்திற்கு எதிராக இந்த வாசகங்கள் இருக்கின்றன என்பதை எங்களது சந்திப்பு முடிவெடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.
சிறுமிகளின் மீது பழியைப் போட்டு அவர்களைத் தாழ்த்துவது சரியல்லை என்று பெண்கள், குடும்பம், சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் ஹனா இயோ தெரிவித்திருக்கிறார். "பெண்களை மதிக்க ஆண்களும் கற்றுக்கொள்ளவேண்டும்," என்று அவர் கூறினார்.
சிறுமிகளின் பாதுகாப்புக்கும் மானத்திற்கும் தாங்கள் மட்டுமே பொறுப்பு என்ற தவறான கருத்தை இது போன்ற வாசகங்கள் காட்டுவதாகப் பெண்கள் உதவி அமைப்பின் துணை அதிபர் மீரா சமந்தர் தெரிவித்திருக்கிறார். ஒன்பது வயது சிறுமிகள் தங்களது மானத்தைப் பாதுகாப்பது பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை என்றும் அவர் சொன்னார்.