உலக வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்க அமெரிக்க அரசாங்கம் கருதுகிற நபர்களில் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னைய தலைவர் இந்திரா நூயியும் ஒருவர். அவருடன் அமெரிக்க நிதியமைச்சின் அதிகாரி டேவிட் மெல்பாசும் 'ஓவர்சீஸ் பிரைவட் இன்வெஸ்ட்மண்ட் கார்ப்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அ-திகாரி ரே வாஷ்பர்னும் இந்தப் பதவிக்காகக் கருதப்படுவதாக வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்தது.
தற்போது உலக வங்கியின் தலைவராக இருக்கும் திரு ஜிம் இயோங் கிம் பிப்ரவரி 1ஆம் தேதி பதவியிலிருந்து விலகிய பின்னர் இவர்களில் யாரேனும் இந்தப் பதவியை ஏற்கலாம்.
சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த இந்திரா நூயி, அங்கேயே படித்து வளர்ந்தார். பாஸ்டன் ஆலோசகக் குழுமம், மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் 1994ஆம் ஆண்டில் திருமதி நூயி பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்தார். 2-001ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 2006ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திருமதி நூயி நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியை திருமதி நூயி ஏற்பாரா என்பது இன்னும் தெளிவாக இல்லை. ஆயினும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் திருவாட்டி இவாங்கா டிரம்ப், திருமதி நூயியை முன்மாதிரியாகக் கருதுவதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
திரு ஜிம்மின் பதவி காலம் 2022ஆம் ஆண்டில் வரை இருந்தாலும் திரு டிரம்ப்புடனான வேறுபாடுகளின் காரணமாக அவர் முன்கூட்டியே விலகியதாகக் கூறப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட இவர் 2016ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.