கானாவில் காற்பந்தில் ஊழலை அம்பலப்படுத்திய செய்தியாளரைத் துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வேலையிலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அகமது ஹுசேன் சுவாலேயை மோட்டார்சைக்கிளில் வந்த ஆடவர்கள் மூன்று முறை சுட்டதாக அவர் வேலை செய்துவந்த 'டைகர் ஐ பிஐ' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்தது. "அருவருக்கத்தக்க இந்தச் செயலால் நாங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஆயினும், ஊழலுக்கு எதிரான எங்களது உறுதி ஆட்டங்காணாது," என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. கானாவின் முன்னைய காற்பந்துத் தலைவர் குவேஸி நியன்கட்யியும் 77 காற்பந்து நடுவர்களும் கையூட்டு பெற்றதற்கான ஆதாரத்தை அகமது ஹுசேன் தனது ஆவணப்படத்தின்வழி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கானா அரசாங்கம், தனது காற்பந்துச் சங்கத்தைக் கலைத்தது. மற்ற பல ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் அதிக பத்திரிகை சுதந்திரம் கொண்ட கானாவில் இந்தக் கொலை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. "குற்றவாளிகளை போலிசார் உடனே தேடிப் பிடிப்பர் என நான் எதிர்பாரக்கிறேன்," என்று அந்நாட்டின் அதிபர் அஃபூக்கோ அட்டோ டுவிட்டரில் தெரிவித்தார்.
காற்பந்துத் துறையில் ஊழலை அம்பலப்படுத்திய செய்தியாளர் கொலை
1 mins read
உயிரிழந்த செய்தியாளர் ஹுசேன் சுவாலேயின் இறுதிச் சடங்கில் கூடி அமர்ந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள். (படம்: ராய்ட்டர்ஸ்) -

