பிரிட்டனில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் இவ்வாரம் முழுதும் நடைபெற்றன. தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிய பங்கை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பாராட்டியதாக 'தமிழ் கார்டின்' இணையச் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காணொளி ஒன்றை இவ்வாரத்தின் தொடக்கத்தில் தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். "அயரா உழைப்பு, கடமை உணர்வு, அறச்சிந்தனை ஆகியவற்றின் மூலம் தமிழ்ச் சமூகத்தினர் பிரிட்டனுக்கு பெரிதளவு பங்காற்றுவதை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம்," என்று திருவாட்டி மே தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்களின் மனித உரிமை போராட்டத்திற்கு லேபர் கட்சி துணை நிற்பதாக அதன் தலைவர் ஜெரமி கோர்பின் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். அத்துடன், லண்டனின் மேயர் சதிக் கான், பொங்கல் வாழ்த்துகளைத் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பிரிட்டனில் கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.