கோலாலம்பூர்: மலேசியாவின் பாகாங் மாநில சுல்தான் மலேசியாவின் புதிய மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில ஆட்சியாளர் மாநாடு இன்று காலை கூடி சுல்தான் அப்துல்லா ரியாயட்டுடினை மன்னராக நியமித்ததாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவின் மாமன்னராக இருந்த கிளந்தான் சுல்தான் பதவி விலகியதை அடுத்து சுல்தான் அப்துல்லா இந்தப் பதவியை ஏற்கிறார். பேராக்கின் மன்னரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மாமன்னராகப் பணியாற்றுவார் என்று மலேசியாவின் தேசிய அரண்மனை தெரிவித்தது. மலேசியாவின் ஒன்பது மன்னர்களில் எட்டு மன்னர்கள் இன்று காலை நடந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். கிளந்தானின் சுல்தான் ஐந்தாம் முகம்மது இதற்கு வரவில்லை.
அரசமைப்புச் சட்டப்படி மன்னராட்சியைக் கொண்ட மலேசியாவில் மாமன்னர் பதவி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் மாநில மன்னர்களிடையே கை மாறும். இந்த முறையின்கீழ் கிளந்தான் சுல்தானுக்கு அடுத்து மாமன்னர் பதவியை பாகாங்கின் சுல்தான் ஏற்கவேண்டும்.
விளையாட்டு வீரரான சுல்தான் அப்துல்லா, பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பதவி வகித்திருக்கிறார். அவர் ஃபிஃபா அனைத்துலக காற்பந்து மன்றத்தின் உறுப்பினராகவும் ஆசிய ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.