விருப்பத்தின் பேரில் அல்லது சட்டத்துறை கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு விதிக்கப்படும் மரண தண்டனையை ஆராயும் ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த நிபுணர் ஒருவர், சவூதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்த விசாரணையை வழிநடத்த துருக்கிக்குச் செல்வதாக ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஷாங்கிடன் போஸ்ட்' பத்திரிகை செய்தியாளரான கஷோகி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மானின் நீண்டகால விமர்சகராகவும் இருந்தார். அக்டோபர் 2-ஆம் தேதி துருக்கியின் தலைநகர் இஸ்டான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அனைத்துலக நாடுகள் கடுமையாகக் கண்டித்தபோதும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இது குறித்து அதிக அக்கறைப்படவில்லை என்ற கவலைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அனைத்துலக விசாரணை தேவைப்படும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெல்வட் கவுசொக்லு தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளுக்கு துருக்கிய அதிபர் ரெசப் தயிப் எர்துவான் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.