மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
விரைவுச்சாலையிலுள்ள மெனொரா சுரங்கத்தில் இந்த விபத்து நடந்தது. உதவிக்கான அழைப்பு இன்று காலை 5.18 மணிக்குக் கிடைத்ததாக அந்நாட்டின் தீயணைப்புத் துறை தெரிவித்தது. மேரு ராயா தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சாலையில் சென்றுகொண்டிருந்த மோட்டர் சைக்கிள் திடீரென சறுக்கி சாலையின் நடுத்தடுப்பு ஒன்றின்மீது மோதியது. மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவத் துணை அதிகாரிகள் உறுதி செய்தனர். மோட்டார் சைக்கிளில் உடன் சவாரி செய்திருந்த பெண் லேசான காயங்களுடன் தப்பினார்.