தென் பிலிப்பீன்சின் ஜோலோ தீவிலுள்ள தேவாலயத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இன்று காலை நிகழ்ந்ததில் குறைந்தது எழுவர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சி அமைப்புகள் தளம் கொண்டுள்ள அந்தப் பகுதியில், முஸ்லிம்களுக்கென புதிய தன்னாட்சி வட்டாரத்தை அமைப்பதற்கான வாக்கெடுப்பு முடிந்து சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்ததாக பிலிப்பீன்ஸ் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜோலோ தீவிலுள்ள கத்தோலிக தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்ற வேளையில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டார ராணுவ பேச்சாளர் 'லெஃப்டினன்ட் கர்னல்' ஜெர்ரி பேசானா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் ஐந்து காவல்துறையினரும் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.
முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பங்சாமொரொ வட்டாரத்தைத் தன்னாட்சி வட்டாரமாக அறிவிப்பது குறித்த வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. அந்த வட்டாரத்தில் ஜோலோ தீவு உள்ளது. பல்லாண்டுகளாக நீடித்துவரும் பூசலால் நிலைகுலைந்த அந்தத் தீவு மக்களின் வாழ்க்கையைப் புதிய தன்னாட்சி வட்டாரம் மேம்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.