அன்வார்: இன, சமய நல்லிணக்கத்தைக் காக்கவேண்டியது மிகவும் முக்கியம்

அன்வார்: இன, சமய நல்லிணக்கத்தைக் காக்கவேண்டியது மிகவும் முக்கியம்

1 mins read
d371a837-4c18-4df1-abd9-d05ae0052d31
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

மலேசியாவின் கேமரன் மலை இடைத்தேர்தலில் எதிர்த்தரப்பு தேசிய முன்னணி வெற்றிபெற்றுவிட்டதை அடுத்து ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். பொருளியல், வாழ்க்கைச் செலவு தொடர்பில் மக்களிடையே நிலவும் அதிருப்தியை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதையே அந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது என்று தாம் நம்புவதாகவும் அன்வார் தெரிவித்தார். "கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரும்பாடுபடவேண்டும். இன, சமய விவகாரங்களை அனைவருக்கும் பலன் தரும் வகையில் கையாளவேண்டும்," என்று அறிக்கை ஒன்றில் திரு அன்வார் தெரிவித்துள்ளார். கேமரன் மலை இடைத்தேர்தல் இம்மாதம் 26ஆம் தேதி நடந்தது. அதில் அம்னோ கூட்டணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்தத் தொகுதியில் சென்ற தேர்தலில் அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் கிடைத்த அதே அளவு வாக்குகள்தான் இடைத் தேர்தலிலும் கிடைத்திருக்கின்றன என்பதை திரு அன்வார் தரப்பினர் சுட்டுகிறார்கள். அதேவேளையில், இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு முன்பைவிட அதிக வாக்குகள் கிடைத்து இருப்ப தாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அந்த இடைத்தேர்தலில் அம்னோ கூட்டணி வேட்பாளர் ரம்லி முகம்மது நூர், 61, பெற்ற வெற்றியைத் தான் ஒப்புக்கொள்வதாகவும் அவரைப் பாராட்டுவதாகவும் பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் குறிப்பிட்டார். இடைத்தேர்தலில் திரு ரம்லி, 3,238 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.