ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோவின் நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் கைது செய்யப்பட்ட மெங்கை அந்நாட்டுக்கு அனுப்புவது குறித்து கனடா யோசித்து வரும் வேளையில் இந்த வழக்கு கனடிய உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது.
தனது பிணைக்கான பொறுப்பாளியை மாற்ற வான் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றது.
கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி மெங் கனடாவில் கைது செய்யப்பட்டார். ஹுவாவெய்யும் மெங்கும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகளை மீற மெங் வங்கிகளுக்கு உதவி செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறார். விசாரணைக்காக மெங்கை தன்னிடம் அனுப்புமாறு அமெரிக்கா விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கனடாவின் அரசாங்கத்திற்கு ஒரு மாத அவகாசம் உள்ளது. மெங்கின் வழக்கை கனடிய நீதிமன்றம் நடுநிலை தவறாமல் விசாரிக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரிலாந்து தெரிவித்தார்.
வரும் மார்ச் 6ஆம் தேதி மெங் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படுவார் என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே வர்த்தக மோதல் நிலவி வரும் வேளையில் மெங்கின் கைது இந்நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பாதித்துள்ளது. மெங் கைதானதைத் தொடர்ந்து சீனா, பாதுகாப்புக் காரணங்களின் பேரில் இரு கனடியர்களைக் கைது செய்தது. மேலும், போதைப்பொருள் கடத்தலின் பேரில் கனடியர் ஒருவருக்கு சீனா மரண தண்டனை விதித்தது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதற்கு எதிராக மெங் வலுவான வாதத்தை முன்வைக்கலாம் என்று சீனாவுக்கான கனடிய தூதர் கூறியதை அடுத்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரைப் பணிநீக்கம் செய்தார்.