உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிராக மலேசியா அண்மையில் அறிவித்துள்ள தடை இன்று சாபாவில் நடப்புக்கு வருகிறது. இந்தத் தடை மலேசிய தீபகற்பத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றத்திற்கு சாபாவின் மக்கள் தயாராக இருப்பதாக அந்த மாநிலத்தின் சுகாதார, மக்கள் நலன் துணையமைச்சர் நுராஸ்லினா அரிஃப் தெரிவித்ததாக 'த மலே மெயில்' செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
"இந்தத் தடை குறித்து ஒரு சிலருக்கு ஆதங்கங்கள் இருந்தாலும் புகைப்பிடிப்பவர்களில் பலர் புதிய விதிமுறைகளைப் பிரச்சினையாகக் கருதவில்லை," என்று அவர், சீனப் புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தத் தடையால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அவர் சொன்னார்.