புதுடெல்லியிலிருந்து புறப்பட்ட 'ஜப்பான் ஏர்லைன்ஸ்' விமானம், ஜப்பானின் தோக்கியோ நகரிலுள்ள நரிட்டா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான ஓடுபாதையில் சறுக்கி அதற்கு வெளியே இருந்த பனித்தரையில் திடீரென நின்றது. விமானத்திலிருந்த 201 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர். அத்துடன் விமானத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தினால் நரிட்டா விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்று ஜப்பானிய நேரப்படி காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை மூடப்படவேண்டியிருந்தது. விமானம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டது.
சம்பவத்திற்கான காரணம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், விமானச் சக்கரங்களில் ஒன்று ஓடுபாதையில் இருந்த பனியின் மீது ஓடி விமானம் தடுமாறியிருக்கலாம் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.